Sunday, June 12, 2011

சகாயம் காட்டாத சகாயம்


மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருக்கும் மக்கள் நேசிக்கும் மனிதர் யார்... சகாயம்... புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை கிராமத்தில் பிறந்த நெஞ்சுரம் மிக்க தமிழர். வறுமையில் பிறந்து, வள்ளுவனை படித்து, பெற்றோர்களின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சகாயம் தேர்தல் ஆணையத்தால் மதுரைக்கு மாறுதல் ஆனவர்.  மதுரையில் தேர்தலை சிறப்பாக நடத்த தகுதியானவர் என்பதை தேர்தல் ஆணையம் சரியாக தேர்வு செய்துள்ளது.  ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தனது சொத்துக் கணக்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லும் சகாயம்... தனது வங்கி இருப்பை வெளிப்படையாக தெரிவிப்பவர்.

லஞ்சம் வாங்கி அனைத்தையும் வாங்கும் பல அரசு அதிகாரிகளுக்கு மத்தியில் தனது குழந்தையின் மருத்துவ செலவிற்கு கூட பணம் தேடும் நிலையில் இருந்தவர் தான் இந்த ஆட்சியர்.  ஆம் கோயம்புத்தூரில் வருவாய்த்துறை அதிகாரியாக மாற்றலாகியிருந்த நேரம் தனது மூன்று வயதுப் பெண் குழந்தைக்கு தீடிரென ஒரு நாள் மூச்சு விடுவதில் சிக்கல்.  மருத்துவமனைக்கு எடுத்து ஓடினார்.  ஊசி போட்டு மாத்திரை கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தவருக்கு... குழந்தையைப் பரிசோதித்த டாக்டர் உடனே குழந்தையை அட்மிட் செய்ய வேண்டும் என்றார்.  மாதக் கடைசி, பாக்கெட்டில் ஆயிரத்திற்கும் குறைவு. புதிய இடம், அறிமுகம் என்று சொல்லிக்கொள்ள ஆள் இல்லை.  தனக்கு கீழ் பணிபுரிவோரிடம் கடன் கேட்க தயக்கம்.  வானத்தைப் பார்த்து யோசிக்கையில் தனக்கு காஞ்சிபுரத்தில் நண்பராக இருந்த பள்ளி ஆசிரியர் கோவைக்கு மாற்றலாகி வந்திருந்தது ஞாபம் வர அவரை தொடர்பு கொண்டு நாலாயிரம் கொண்டுவரச் சொன்னார்.  அவர் கொண்டுவந்ததும் சிகிச்சை செய்யப்பட்டது.  அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்தார்.  இவர் நினைத்திருந்தால், ஒரே மணி நேரத்தில் பல இலட்சங்களை வாங்கியிருக்க முடியும். ஆனால் அதைச் செய்ய வில்லை.  லஞ்சம் கொடுக்க மதுபானக் கடை உரிமையாளர்கள் தயாராக இருந்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சம் தான் மிகப் பெரிய தடை. நான் எந்த வொரு சூழலிலும் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதியோடு இருக்கிறார். இந்த கிராமத்தானுக்கு வைராக்கியம் அதிகம் தான்.

காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியாராகப் பணியாற்றிய காலத்தில் ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததை புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்டு, மாதிரியை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்து, சோதனை முடிவு குடிக்க தகுதியற்றது என்று வரவே, அறிக்கை தயாரித்து அந்த உலகாளவிய நிறுவனத்திற்கு சீல் வைத்தவர்.  அறிக்கையின் நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்து பூட்டி சீல் வைக்கப் போகிறோம் என்று சொன்ன போது உடனிருந்த அரசு அதிகாரிகள் கூட ஆடிப்போனார்களாம். பல்வேறு இடங்களிலிருந்து வந்த பிரசர்களை சுலபாக எதிர் கொண்டிருக்கிறார்.  உண்மை வெல்லும் என்பது உண்மையே.

எனக்கு கிடைத்த வாய்ப்பை ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவேன் எனக் கூறும் சகாயம் நேரிடையாக கிராமங்களுக்கே செல்கிறார்.  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களையெல்லாம் கிராமங்களிலே நடத்துகிறார். எங்க ஊருக்கு நேத்து கலெக்டர் வந்து போனார் என மக்கள் சொல்வது எவ்வளவு பெரிய மாற்றம். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக வருவதற்கு முன் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்தார். 

நாமக்கல் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக்க ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீட்டி இதுவரை ஏழு லட்சம் மரக்கன்றுகள் மக்களின் ஒத்துழைப்போடு நடவு செய்துள்ளார். இதனைப் பராமரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். மரத்த வச்சவன் மரமாக்கி பார்ப்பான். நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் என எல்லா இடங்களுக்கும் திடிர் விசிட்.  சிறப்பாக இருக்கும் இடங்களில் எல்லாம் பாராட்டு. மேம்படுத்த வேண்டிய இடங்களில் குட்டு வைக்கவும் தவறுவதில்லை. 

இந்தியாவிலேயே தன் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிட்ட முதல் ஆட்சிப் பணி அதிகாரியான இவருக்கு மதுரையில் ஒன்பது இலட்ச ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் லோன் போட்டு கட்டப்பட்ட வீடு ஒன்றுதான் சொந்தமானது. 15 இடங்களுக்கு பணிமாற்றல் செய்தாலும் செய்யப் போகிற பணி ஒன்றுதான்.  அது நேர்மை வழியில் நெஞ்சை நிமிர்த்து மக்களுக்காக பணியாற்றுவதுதான்.

நம்ம சம்பாத்தியத்துலதான் நமக்காகச் செலவு செய்யணும் நீர நேர்மையான அதிகாரியா செயல்பாடனும் போன்ற அம்மா அப்பாவின் வார்த்தைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து வரும் இவரை வாய்க்கு வந்தபடி வசைபாடுதல் தகுமோ. நல்ல நோக்கத்தோடு (உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், என்ற பெருமை நமக்கு உள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே தேர்தல் தான். சுதந்திரமாக தேர்தலை நடத்த, எங்களைப் போன்ற அலுவலர்களை தேர்தல் கமிஷன் பணித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தலை சிலர் மட்டுமே சேர்ந்து நடத்த முடியாது. அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. அதே போல நமது தேசத்திற்கு உள்ள அடையாளம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை. அத்தகைய ஜனநாயகம் போற்றப்பட வேண்டுமென்றால் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தால்தான் அது உண்மையான ஜனநாயகமாகும். இப்பணியை மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, போலீஸ் துறையால் மட்டுமே செய்து விட முடியாது. அனைவருடைய பங்களிப்பும் இதில் இடம்பெற வேண்டும். 2 நாட்களில் 200க்கும் மேற்பட்ட வந்த புகாரின் அடிப்படையில் பல இடங்களுக்கு சென்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டேன். உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் கடமை உள்ளது. நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில், 18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களையும் ஓட்டளிக்க சொல்லுங்கள். நேர்மையான ஓட்டுப்பதிவு முக்கியம். அன்பளிப்பு பெற்றாலும் அது லஞ்சம் தான். அதைப் பெறாமல் ஓட்டளியுங்கள். லஞ்சம் பெற்று அளிக்கும் வாக்கு; தேச நலனுக்கு தூக்கு.எந்த மாற்றத்தையும் இளைஞர்கள் தான் உருவாக்க முடியும். "லஞ்சம் இல்லாத ஓட்டளிப்போம்' என மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புங்கள் என்றார்) பேசிய வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டு செய்தியை திரிப்பது தர்மம் ஆகாது.  நல்ல மாற்றம் வேண்டுமென்று பள்ளி கல்லூரி மாணவர்களிடம் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை வைத்துள்ளவர் வாக்களிக்க லஞ்சம் வாங்காதீர்கள் என்று மாணவர்களிடம் அவர் பேசியதில் வியப்பேதுமில்லை.


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார்.  யார் வாக்களர்களுக்கு பணம் கொடுத்தாலும் சகாயம் காட்டமாட்டார்.  தன் மீது எந்த ஒரு கட்சி சாயமும் பூசி விட வேண்டாம் என்று பணிவோடு வேண்டுகிறார். இவரை ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார், சகாயம் போன்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் தங்களது பொறுப்பின் மதிப்பை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.  நேர்மையின் சின்னமாக விளங்கும் இவரைப்போன்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எண்ணிக்கையில் அதிகரிக்க வேண்டும்.  அப்போதுதான் தங்களது ஆட்சி அதிகாரத்தால் எதையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்களின் கொட்டம் அடங்கும். 

Monday, October 25, 2010

மாற்றத்தின் கருவி - தெய்வானை

மாற்றத்தின் கருவி

 
மதுரை தானம் மக்கள் கல்வி நிலையத்தில் தலைமைத்துவ பயிற்சி நிறைவு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.  விழாவின் இறுதியில் பேசிய கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் நாளை குடியரசு தினம், குடியரசு தின விழாவை இவ்வளாகத்தில் கொண்டாட இருக்கிறோம். இந்த விழாவில், தலைவிகளாகிய நீங்கள் கலந்து கொள்ள விரும்புகிறோம். விருப்பமுள்ளவர்கள் காலை எட்டு மணிக்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் என்றார்.
தலைமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் மதுரை நகர்ப்புறத்தில் உள்ள களஞ்சிய வட்டாரங்களின் நிர்வாகிகள். தலைமைத்துவ பயிற்சி மூன்று நாட்கள் தங்கிப் பயிலும் பயிற்சி. இப்பயிற்சியில் குடும்பத்திலிருந்து மூன்று நாட்கள் பிரிந்து இருந்தவர்களிடம் தான் நான்காவது நாள் காலையிலேயே கலந்து கொள்ள விருப்ப அழைப்பு. பெண்கள் குடும்பத்தை நகர்த்துபவர்கள். இவர்கள் இல்லாத நிலையை, அனுபவித்தவர்கள் நன்கு அறிவர். குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டே அமைப்பு/நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, அலங்கரிக்க தவறாது பயிற்சிகளில் பங்கெடுக்கின்றனர்.
அடுத்த நாள் பணியாளர்களின் வருகைக்கு முன்பே ஐந்து தலைவிகள் வருகை புரிந்திருந்தனர். தன் கணவரையும் உடன் அழைத்து வந்து விழாவில் கலந்து கொண்டார் திருமதி தெய்வானை. விழா முடிந்தபின் நடைபெற்ற சிரமதானப் பணியிலும் முழுமையாக ஈடுபட்டு சற்று புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்தார் தெய்வானை.
மானாமதுரைக்கருகில் சிறுகுடி கிராமத்தில் சுப்பையா- செல்லம்மாள் இணையர்களுக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது பிறப்பின்போது இந்தியாவும் பாகிஸதானும் போரிட்டுக் கொண்டிருந்தனவாம். இந்த நேரத்தில் சுப்பையாவும், செல்லம்மாளும் கூட சண்டையிட்டுக் கொண்டனர். தெய்வானைக்கு முன்னும் பின்னும் சகோதரிகள் தான். சுப்பையா குடும்ப தண்டவாளத்திலிருந்து தடம்புரள அக்காவின் வழிகாட்டுதலிலேயே வளர்ந்திருக்கிறார் தெய்வானை.
இளம் வயதை சிறுகுடி மற்றும் இடைகாட்டூர் பள்ளிகளில் பயின்று கழித்த்தார். மதுரை சொக்கிகுளத்தில் விடுதியில் தங்கு எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்றார். மேற்கொண்டு பள்ளி படிப்பு என்பது முற்றுப் பெற்றது. ஆனால், கற்றல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மதுரையில் உள்ள ராஜா கிளினிக்கில் அக்கா நர்சாக பணிபுரிந்தார். குடும்பத்தின் சூழல் அக்காவோடு பணிபுரிய பணிந்தது. கணக்காளராக மூன்று ஆண்டுகள் செம்மையான கணக்குப் பராமரிப்பால் தெய்வானை தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இக்காலத்தில் செவிலியர் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1989-இக் கட்டுரையில் தெய்வானையின் திருமணத்தை குறிப்பாக உணர்த்தும் ஆண்டு. ஆம், மானாமதுரையில் மகளாக இருந்தவர் மதுரைக்கு மருமகளாக, கோவிந்தசாமியுடன் வாழ்க்கையில் இணைந்தார். இருவீட்டாரும் உறவுகளாக இருந்தாலும் தெய்வானைக்கு பரிச்சயம் குறைந்த இடம்தான்.
முழுவதும் பெண்கள், பெண்கள் நிர்வாகம் என்று இருந்த குடும்பத்திலிருந்து, ஆண்கள் அதிகமிருந்த கோவிந்தசாமியின் வீடும், உறவுகளும் புதிதுதான். மகள் இல்லாத மாமியார் மருமகளை மகளாகவே பாவித்தார். கணவர் கோவிந்தசாமி ஆவினில் பணிபுரிந்தார். பிற்பாடு அந்தப் பணியிலிருந்து விலகி சுய முயற்சியில் ...
திருமணமாகி பத்து வருடங்கள் வீட்டுக்குள்ளேயே கடந்தது. மாமனார், மாமியார், கணவர். கொழுந்தனார், குழந்தை என்ற கூட்டுக் குடும்பத்தில் மருமகளாய் தன் பணியை செவ்வனே செய்து வந்தார். மாமியார் மெச்சிய மருமகளாக (மகளாக) வாழ்க்கைப் பயணம் கடந்தோடியது.
2001-ல் தெய்வானையை புதிய பரிமாணத்தில் மாற்றியமைய அச்சாறமிட்ட ஆண்டு. ஆம் 'களஞ்சியம்' என்கிற சுய உதவிக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்ட ஆண்டு. லதா என்கிற சமூகப் பணியாளரின் முயற்சியில் 'மல்லிகை' களஞ்சியம் உருவாக்கப்பட்டது. இந்த மல்லிகை களஞ்சியத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
மல்லிகை வாசம் குறைந்து போனது. ஒரு சிலரின் சொந்த செயல்பாடுகளினால் மல்லிகை மாலையிலிருந்து உதிர்ந்து ஓடியது. பின் தெய்வானைக்கு நட்பு களஞ்சியம் கை கொடுத்து உறுப்பினராக்கியது. தனது சிறந்த செயல்பாடுகளினால் பகுதி தலைவியானார். செல்லூர் வட்டாரக் களஞ்சியத்தின் உப தலைவி, களஞ்சிய இயக்க செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் தனக்கான தடம் பதித்தார். தற்போது 'சுகம்' மருத்துவமனையின் பொருளாளராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பணியாளர்களை ஆய்வு செய்வதிலும், மதிப்பிடுவதிலும் கை தேர்ந்தவர் தெய்வானை. தான் இருக்கின்ற பகுதியை முன்னோடிப் பகுதியாக மாற்றியதில் திருமதி. தெய்வானையின் பங்கு முக்கியமானது. இவர் சார்ந்துள்ள வைத்தியநாதபுரம் பகுதி விழாக்களில் கலந்து கொள்வது, களஞ்சிய செயல்பாடுகளில் முன்னோடியாக இருப்பது என செல்லூர் களஞ்சிய வட்டாரத்தில் முதன்மையாக இருக்கிறது.
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் இணைந்துள்ளனர். ஒவ்வொரு உறுப்பினரிடமும் தனித்தனியாக பேசி, புரியவைத்த 100 சதவீதம் காப்பீட்டில் இணைய வைத்தது, தான் ஏற்றுள்ள பொறுப்பை முழுமைபடுத்தியுள்ளார் என்றே கூறலாம்.
கூட்டம் என்று வாசல்படி தாண்டிய போதெல்லாம் வசவுகளை பெற்றது ஒரு காலம். இன்று காலம் கை கூடியுள்ளது. ஆம் குடும்ப உறுப்பினர்களே வாழ்த்தி வழியனுப்பி வைக்கின்றனர். தான் மட்டும் வாழ்வது, வளர்வது அல்ல வாழ்க்கை.  சுற்றமும், நட்பும் சேர்ந்து வாழ்வது, வளர்வது தான் வாழ்க்கை என்பதை வாழ்ந்துகாட்டிக் கொண்டிருக்கிறார்.
பெரிய செல்வ சீமாட்டிகள் தான் பொதுப்பணிகளில் ஈடுபடுவது என்ற வரையறை அடித்து நொறுக்கியவர்கள் சுய உதவிக் குழுவில் ஏழ்மையில் உள்ள பெண்கள். பிறந்தது, வளர்ந்தது, வாக்கப்பட்டது, வாழ்ந்து கொண்டிருப்பது என்று நான்கு நிலையிலும் 'வயிறார சாப்பாடு, இருக்க வீடு, உழைக்க கூடு' இதுதான் தெய்வானையின் குடும்ப நிலை. ஏழ்மையிலும் நேர்மை இந்த சொற்றொடர் மிகப் பொருத்தமானதாகும். ஏழைகள் நேர்மை தவறுவது, தவறிக் கூட நடைபெறுவதில்லை என்பதைச் சொல்ல முடியும்.

பகுதி உருவாக்குதல் தொடர்பான பயிற்சி கொடுக்க தெய்வானை அவர்களை அழைத்துச் சென்று திரும்பிய பின் பயணப்படி கொடுக்க தொகையைக் கேட்டேன். மெத்தப் படித்தவர்கள் இதில் பார்த்துவிடுவோமா? அதில் பார்த்து விடுவோமா? என்று ஏங்கும் இத்தருணத்தில் அவரது செயல்பாடு உண்மை என்ற வார்த்தை புவியில் புலங்குவதற்கு அனுமதியளிக்கலாம் என்றே தோன்றியது.
இப்படி பயிற்சி, கூட்டம், பிரச்சினை தீர்க்க, உறுப்பினருக்கு வீடு ஒத்திக்கு வாங்க என நேரம் மற்றும் நாட்களை கழிக்கிறீர்களே, உங்களது சொந்த நலன் பாதிக்கப்படாதா? என்ற கேள்விக்கு, நான் இங்கிருந்து வந்தவள், இவர்களுக்கு நான் செய்யாமல் ஓபாமா வந்தா செய்வார் என்ற பதில் ஓங்கி அறைந்தது. சற்று நிதானமாக பொருளாதாரம் நிரந்தர ஆதாரம் இல்லை. என் கணவர் வேலை செய்கிறார். சொந்த வீடு, ஒரு பையன் சந்தோஷமாக இருக்கிறேன். பணத்தை சம்பாதிக்கவில்லை, மக்களை சம்பாதித்துள்ளேன். என்னைப் போன்றோரைப் பார்க்கும் போது சந்தோஷமான வார்த்தைகளை வழங்குகிறார்கள். பிறவிப் பயன் அதுதானே...

என்னுடைய இளம் வயதில் ஒரு மருத்துவமனையில் கணக்காளராக இருந்தேன். இன்று மக்களாக நடத்துகிற பெரிய 'சுகம்' மருத்துவமனையில் பொருளாளர். நான் எவ்வளவு பணம் சம்பாதித்திருந்தாலும் இது கிடைத்திருக்குமா? நான் செய்ததது எனது நேரத்தையும், உழைப்பையும் மட்டுமே. எதிர்பார்த்து இருக்க, இருந்திட நான் மூன்றாம் தர மனிதரில்லை. அமைப்பின் அங்கம்.
மக்களிடம் பேசி மருத்துவ காப்பீடு செய்யப் பணிக்கிறோம். அதே நேரம் எங்களது மருத்துவமனை மருத்துவர்களின் செயல்பாடுகளையும் மதிப்பிடுகிறோம். யாராக இருந்தாலும் முகத்துக்கு நேரே பேசுவதுதான் எனது இயல்பு. மருத்துவர்களிடமும், மற்ற பணியார்களிடமும் அப்படித்தான். வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இச்செயலை சிலர் பாராட்டுவர், சிலர் மென்மையாக நடந்து கொள்ளலாம் என்பர். எது எப்படி இருந்தாலும் பின்னாடி பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை என்கிறார்.
தனது பகுதியில் உள்ள 400 உறுப்பினர்களையும் பெயர் சொல்லி அழைக்க இயலும் என்கிறார். மற்றவர்களைப் பார்த்தால் எங்கள் வட்டார உறுப்பினர், இந்த வட்டார உறுப்பினர் என்று சொல்ல முடியும் என்றார். உறவாக நெருங்கிவிட்டமையால் தான் இவ்வளவு நம்பிக்கை இவருக்குள் ஊன்றியுள்ளது. பயிற்சி, விழா, கூட்டம் என அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பார்.
மற்றவர்களை புரியவைக்கும் எளிமையான பேச்சு, எதார்த்தமான செயல்கள், நேரம் தவறாமை, பேச்சு மாறாமை போன்றவற்றை கெட்டியாகப் பிடித்திருக்கும் தெய்வானையின் சிறு வயது கனவு வக்கீல் (வழக்குரைஞர்) ஆவது. இது, அவரது அக்காவின் விருப்பமும் கூட. கால ஓட்டம் இவரது கனவை மாற்றியது. ஆனால், இவர் பிறர் மாற்றத்திற்கான கருவியாகவும் மாறி விட்டார்.

வைத்தியநாதபுரம் பகுதி இணையாளர் கூறுகையில் எங்க பகுதியோட 'பொக்கிஷம்' ஒவ்வொரு உறுப்பினரையும் தெரியும். அந்த உறுப்பினர்களின் வாழ்நிலை அறிந்துள்ளதால், அவர்களுக்காக திட்டமிடவும் செய்வார்.
எங்கேயும் பணி, பயிற்சி விஷயமாக செல்வதென்றால் பாதை தெரியாது, பயம் என்று பேசுவதே இல்லை. பாதையை தெரிஞ்சுக்கலாம் என்னும் அளவிற்கு பக்குவப்பட்டவர். எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார்.

தானாக முன்வந்து வரிந்துகட்டி பணிசெய்யப் பக்குவப்பட்டிருக்கும் தெய்வானை எதையும் எதிர்பார்த்து செய்பவராக இல்லை என்கிறார். இவர்கள் மத்தியில் கணக்காளராக பணியாற்றிய அங்கயற்கண்ணி.
சுய உதவிக் குழுக்கள் மிகப் பெரிய மாற்றத்தின் கருவியாய் உருவெடுத்திருப்பதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. தெய்வானை போன்ற பெண் தலைவர்களை சமூகத்திற்கு அடையாளங்காட்டி, பொதுவாழ்விலும் பெண்கள் சாதிக்க முடியும் என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறது.